search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு முதல் பலி - சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுவன் மரணம்
    X

    தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு முதல் பலி - சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுவன் மரணம்

    டெல்லியில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் மலேரியா, சிக்கன் குன்யா மற்றும் டெங்கு ஆகிய தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 153 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 325 பேர் டெல்லிவாசிகள் என்றும் மீதியுள்ளவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புதேடி டெல்லிக்கு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கடந்த 19-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் உள்ள 412 பேர் மலேரியா நோயாலும், 311 பேர் சிக்குன் குன்யா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பிழைப்புக்காக டெல்லி வந்து இங்குள்ள சப்தர்ஜங் பகுதியில் தங்கியுள்ளனர். இந்த குடும்பத்தை சேர்ந்த நிதிஷ் குமார் என்ற 12 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.

    ஆனால், இம்மாதம் முதல்தேதி அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் என தெற்கு டெல்லி மேயர் கமல்ஜீத் ஷெராவத் இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×