search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு வளையத்தை 100 முறை மீறிய ராகுல் காந்தி: மத்திய மந்திரி குற்றச்சாட்டு
    X

    பாதுகாப்பு வளையத்தை 100 முறை மீறிய ராகுல் காந்தி: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவருக்கான பாதுகாப்பு வளையத்தை சுமார் 100 முறை மீறியதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அங்கு சென்றார். அப்போது, அவரது கார் மீது சிலர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சென்ற காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இந்நிலையில், மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

    கார் கண்ணாடியின் மீது வீசப்பட்ட கல் ராகுல் மீது பட்டிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்தாகி இருக்கும். அவரை கொல்ல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ராகுல் காந்தி வீரமரணம் அடைந்த ஒரு தியாகியின் மகன். அதனால் நாங்கள் பயப்படவில்லை. ஆனால், குஜராத்தில் ராகுல் காரை நோக்கி கல் வீசப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜ.க. மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நிராகரிக்கப்பட்டதா? என்பதை நாம் ஆய்வு செய்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    ராகுல் காந்தி ஒரு தேசிய தலைவர். இந்த அவையின் மதிப்புக்குரிய ஒரு உறுப்பினரும் ஆவார். அவர் மதிப்புமிக்கவர். பாதுகாப்பை மீறுவது என்பது உயிருக்கு தீங்கை தேடிக் கொள்வதாகும் என்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

    ராகுல் காந்தி கடந்த இரண்டாண்டுகளில் திட்டமிட்டும் திட்டமிடாமலும் 121 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குண்டு துளைக்காத காரை தவிர்த்துவிட்டு சுமார் 100 முறை அவர் வெளியே சென்றுள்ளார். இந்த பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கும் ராகுல் காந்திக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை. ஆறுமுறை 72 நாட்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அவர் வெளிநாடுகளுக்கு சென்றார். பாதுகாப்பு படையினரை தவிர்த்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் அவர் எதை மறைக்க முயன்றார்? என்பதை இந்த நாட்டும் பாராளுமன்றமும் தெரிந்து கொள்ள வேண்டும்.


    குஜராத்தில் வெள்ளப்பகுதிகளை பார்வையிட அம்மாநில முதல் மந்திரியும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், அவருக்கு எதிராக எந்த போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், ராகுல் காந்தியின் வருகையை எதிர்த்து சுமார் 4 ஆயிரம் மக்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என்பதை காங்கிரஸ்காரர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    குஜராத் சென்றபோது ராகுல் காந்திக்கு குண்டு துளைக்காத கார் அளிக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, அந்த காரை தவிர்த்துவிட்டு வேறொரு காரில் பயணம் செய்தார். பயணத்துக்கு இடையே திட்டமிடப்படாத சில இடங்களில் காரைவிட்டு அவர் கீழே இறங்கினார்.

    லால் சவுக் பகுதியில் ஒருவர் வீசிய கல் பட்டு ராகுல் காந்தி காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. பாதுகாப்புக்கு சென்ற ஒருவீரர் காயம் அடைந்தார். அரசியல் பிரமுகர் மீதோ, பாதுகாப்பு படையினர் மீதோ கற்களை வீசும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளார். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்துமாறு குஜராத் முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×