search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மசோதா - டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி தகவல்
    X

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மசோதா - டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி தகவல்

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மசோதா கொண்டுவரப்படும் என்றும், இத்தேர்வை மாநிலங்கள் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்றும் டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
    புதுடெல்லி:

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மசோதா கொண்டுவரப்படும் என்றும், இத்தேர்வை மாநிலங்கள் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்றும் டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

    தற்போது, 1 முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை (ஆல் பாஸ்) அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் 24 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தின.

    இதையடுத்து, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மத்திய அரசு மசோதாவை மாநிலங்கள் பின்பற்றுவது கட்டாயம் அல்ல. தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    இந்த தேர்வுகள், மார்ச் மாதம் நடத்தப்படும். அவற்றில் தேர்ச்சி பெறாதவர்கள், மே மாதம் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

    அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தாழ்ந்து வருவது உண்மைதான். 4 வருடங்களுக்கு முன்பு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 4 சதவீதம் குறைந்தது. அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 8 சதவீதம் அதிகரித்தது.

    தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை விட அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகம். அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கான காரணத்தை கண்டறிய தனியாக எந்த ஆய்வும் நடத்த தேவையில்லை.

    அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்துவது அவசியம். அதற்காக எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு, சத்தீஸ்கார், மராட்டியம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதே சமயத்தில், அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

    இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

    அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்’ என்று கூறினார். 
    Next Story
    ×