search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத், ஒடிசா, ராஜஸ்தான்  வெள்ளம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
    X

    குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் வெள்ளம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

    குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவ மழை சீசன் காரணமாக வடமாநிலங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த 3 வாரங்களாக இடைவிடாது மழை பெய்கிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பெரும் பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே மிதமிஞ்சிய மழை பெய்திருந்தது.

    தற்போது அங்கு மீண்டும் அதிக மழை கொட்டுகிறது. இதனால்பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள பைத ராணி, சுகர்ன ரேகா, புதா பலாங் ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.

    இந்த ஆறுகளின் நீர் பல இடங்களில் ஊருக்குள் புகுந்துள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் பல இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகமதாபாத், பதான், பனாஸ் கந்தா ஆகியவற்றில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    இதுவரை 25 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பனாஸ் கந்தா மாவட்டத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி, சிரோகி, ஜலோர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. உதய்பூரில் வெள்ளம் சென்ற போது பாலத்தை கடக்க முயன்ற தாய்- மகளை வெள்ளம் இழுத்து சென்றது. இதில் இருவரும் உயிர் இழந்தனர்.

    சில இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றி வருகிறார்கள்.

    ராஜஸ்தானில் சாலை மற்றும் ரெயில் பாதைகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. இதனால் வாகனம் மற்றும் ரெயில் போக்குவரத்துகள் முடங்கி உள்ளன.

    மேற்கு வங்காள மாநிலத்தில் பிர்பும், புருலியா, மேற்கு மிட்னாபூர், ஹூக்ளி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு இன்னும் அதிக மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி சென்றது. தற்போது வெள்ளம் சற்று குறைந்துள்ளது. இதனால் வெள்ள அபாயம் தணிந்துள்ளது.

    உத்தரபிரதேசத்திலும் தற்போது அதிக அளவில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கும் வெள்ள அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×