search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவறை கட்ட பணம் இல்லாவிட்டால் மனைவியை விற்பனை செய்யுங்கள்: கலெக்டர் சர்ச்சை பேச்சு
    X

    கழிவறை கட்ட பணம் இல்லாவிட்டால் மனைவியை விற்பனை செய்யுங்கள்: கலெக்டர் சர்ச்சை பேச்சு

    கழிவறை கட்ட உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களுடைய மனைவியை விற்பனை செய்யுங்கள் என்று பீகார் மாநிலம் அவுரங்காபாத் கலெக்டர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கன்வால் தனுஜ். இவர் அங்குள்ள கிராமத்தில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    தலித் மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். அவர்களை கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    கழிவறை கட்டும் மக்கள் ரூ.12 ஆயிரம் வழங்கினால் மீதி பணத்தை அரசு செலுத்தி கழிவறை கட்டி கொடுக்கும் திட்டத்தை பீகார் அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் பற்றி கலெக்டர் கன்வால் தனுஜ் பொதுமக்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர், பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். அந்த நேரத்தில் பொதுமக்களில் ஒருவர் எழுந்து கழிவறை கட்டுவதற்கு எங்கள் பங்கு தொகையான ரூ.12 ஆயிரம் கொடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை என்று கூறினார்.

    உடனே கோபம் அடைந்த கலெக்டர் கன்வால் தனுஜ், `உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களுடைய மனைவியை விற்பனை செய்யுங்கள், உங்களுடைய மனநிலை இப்படித்தான் இருக்கும் என்று சொன்னால் மனைவியை விற்பது தான் ஒரே வழி' என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, நீங்கள் ஏழையாக இருக்கலாம். ஆனால் 12 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு உங்களால் முடியும்.

    உங்கள் மனைவியின் மதிப்பு ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவு என்று நீங்கள் நினைத்தால் பணம் கொடுக்க வேண்டாம். உங்கள் மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கருதினால் ரூ.12 ஆயிரம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார்.

    கலெக்டர் இப்படி பேசியதை பார்த்து  அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பேசிய பேச்சுக்களை வீடியோவில் பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டனர்.

    இந்த பேச்சு குறித்து கலெக்டரிம் கேட்டபோது, எல்லா மக்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் பேசினேன் என்று கூறினார்.
    Next Story
    ×