search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று 5-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷ ங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    கடுமையான வறட்சியாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கடன் சுமை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. பலரும் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் கடன் சுமைகளை தள்ளுபடி செய்யும் வகையில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொண்டுள்ளனர்.

    இந்த எம்.எல்.ஏ.க்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததற்காக அந்த பாவத்தை கழுவும் வகையில் விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்துகிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தினமும் தொடரும்.,

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×