search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - ராஜ்நாத் சிங்கிடம், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - ராஜ்நாத் சிங்கிடம், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    ‘நீட்’ தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    ‘நீட்’ தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அவசர சட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் ‘நீட்’ தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன்.

    ‘நீட்’ தேர்வு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்வோம் என்று தமிழக அரசு கூறியிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கட்சிகள் தங்கள் சுயநலத்தை பார்க்கிறார்கள்.

    மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக நான் இருந்தபோது ‘நீட்’ தேர்வை கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ‘நீட்’ தேர்வு தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்.

    பெங்களூரு சிறையில் சலுகைகள் பெற்றது தொடர்பாக நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தி அந்த வீடியோ உண்மையானது என்றால் சசிகலா மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் செய்ததால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது பெங்களூரிலும் இவர்களின் ஊழல் தொடருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×