search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரோலில் விடுதலை செய்யக்கோரி மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு
    X

    பரோலில் விடுதலை செய்யக்கோரி மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு

    பரோலில் விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார்.
    கொல்கத்தா:

    பரோலில் விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார்.

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு கடந்த மே 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது. ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த கர்ணன், கடந்த 20-ந் தேதி, கோவை அருகே கைது செய்யப்பட்டார்.

    மறுநாள், கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள பிரசிடென்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக, கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



    இந்நிலையில், தன்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கு நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

    என்னை சிறையில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அரசியல் சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, அரசியல் சட்டத்தின் மேல்அதிகாரம் நிலைநிறுத்தப்படும்வரை, என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்ய வேண்டும்.

    என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுதலை செய்தால், அதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்ற தயாராக இருக்கிறேன்.

    ஆகவே, நீதியின் நலன் கருதி, கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, என்னை பரோலிலோ அல்லது ஜாமீனிலோ விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

    இந்த மனு, விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அவருடைய வக்கீல் மாத்யூ ஜெ.நெடும்பரா தெரிவித்தார். மனுவின் நகல், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில உள்துறை மந்திரி, மாநில சட்ட மந்திரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கூறினார்.

    இதுபோல், 6 மாத சிறைத்தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி கர்ணனின் வக்கீல்கள் ஏற்கனவே மனு அனுப்பி வைத்துள்ளனர். 
    Next Story
    ×