search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 முதலமைச்சர்கள் முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்
    X

    20 முதலமைச்சர்கள் முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 20 முதல்-மந்திரிகள் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா முன் மொழிந்தனர்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிகிறது.

    இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கு ஜுலை 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க. சார்பில் பீகாரில் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்த அவருக்கு, பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அணி சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு 17 கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் செய்தனர்.

    ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவரின் வேட்பு மனுவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலா 50 பேர் முன்மொழியவும், வழி மொழியவும் வேண்டும். அந்த வகையில் ராம்நாத் கோவிந்தை முன்மொழிவோர், வழிமொழிவோரை 4 குழுக்களாக பா.ஜ.க. தலைமை பிரித்திருந்தது.

    ஒவ்வொரு குழுவிலும் தலா 60 எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறும் வகையில் குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன.

    பா.ஜ.க. குழுக்களில் இடம் பெற்றிருந்த அனைவரும் நேற்று டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்துக்கு வந்தனர். நூலக கட்டிடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வந்ததும், வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தொடங்கியது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான பாராளுமன்ற தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்களின் மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கான முதல் குழுவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இடம் பெற்றிருந்தனர்.

    பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் 2-வது குழுவினரும் மனுக்களை கொடுத்தனர். மூன்றாவது குழுவில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சித்தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர்.



    ராம்நாத் கோவிந்தை வழிமொழிவதற்கான 4-வது குழுவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 4 குழுக்களாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு கை குலுக்கியும், மலர் கொத்துகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராம்நாத் கோவிந்தை முன்மொழியும், வழிமொழியும் குழுக்களில் பா.ஜ.க. மாநில முதல்-மந்திரிகள், கூட் டணி கட்சிகளின் முதல்-மந்திரிகள், ஆதரவு கொடுக்கும் முதல்-மந்திரிகள் என 20 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதில் பங்கேற்றார்.

    காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

    ராம்நாத் கோவிந்தை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அது போல பிஜு ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்- மந்திரியுமான நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை.

    சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்-சபை எம்.பி. ராம்கோபால் யாதவ் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள் திரளாக கலந்து கொண்டதால் பாராளுமன்றம் கோலாகலமாக காணப்பட்டது.

    இதையொட்டி பாராளுமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Next Story
    ×