search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை சட்டம்: கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் - முதல்வர் அறிவிப்பு
    X

    இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை சட்டம்: கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் - முதல்வர் அறிவிப்பு

    இறைச்சி மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசின் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு இந்த தொழிலையே நம்பியிருக்கும் ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த உணவை சாப்பிட வேண்டும், இதனை சாப்பிடக் கூடாது என மத்திய அரசு மக்கள் மீது எதையும் திணிக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் மத்திய அரசின் சட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி பொதுமக்களுக்கு விருந்து அளித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்தும் இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    எதிர்ப்பு வலுத்து வருவதால் மத்திய அரசின் தடை உத்தரவை கேரளாவில் அமல்படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது எப்படி? என்பது பற்றி அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மேலும் மாடு விற்பனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-



    கேரள மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் காளைகள், கன்றுகளை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தாங்கள் வளர்க்கும் மாடுகள் வயது முதிர்ந்து விட்டால் அவற்றை கடைகளில் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் காளைகளை விற்க கூடாது என்று சட்டம் வரும்போது அந்த மாடுகளை விவசாயிகள் கொன்று புதைக்கத் தான் வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது ஏழை விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.

    ஏழைகளுக்கு எளிதில் புரதச்சத்து கிடைக்கும் உணவாக மாட்டுக்கறி உள்ளது. தற்போது ரமலான் நோன்பு சமயத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து அறிவித்து இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

    கால்நடை வர்த்தகம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது நாட்டின் மதசார்பற்ற பண்புகளையும், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்து விடும். அவசர கோலத்தில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டின் பன்முகத் தன்மையை நிலைநாட்டுவதற்கு சவாலாக அமைந்து விடும்.

    இதுபோன்ற தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு மாநிலங்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செயல்படாதது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி ஜனநாயகத்துக்கு தீங்கிழைத்து விடும். இந்த சட்டம் மாநில அரசுகளின் உரிமையில் குறுக்கிடும் வகையில் உள்ளதால் இந்த விவகாரத்தில் புதிதாக பிறக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறுகையில் இந்த தடை சட்டம் கேடு விளைவிக்கும். கேரள மக்களை பெரிதும் பாதிக்கும். ஏராளமான தொழில்களும் நலிவடையும். பால் தொழிலை நம்பியே பல குடும்பங்கள் உள்ளன. இதுபோன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பசு வளர்ப்பதையே மக்கள் விரும்ப மாட்டார்கள். இந்த சட்டத்தை எதிர்க்க மாநில அரசுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவோம். அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி கூறும்போது இந்த சட்டத்தை கிழித்து குப்பையில் தான் போட வேண்டும். எந்த வகையிலும் பொருத்தமில்லாத இந்த சட்டம் ஆதிகால தொழிலான மாடு வளர்ப்பை தடை செய்யும் விதத்தில் உள்ளது. கேரள மக்கள் ஒருபோதும் இந்த சட்டத்தை ஏற்க மாட்டார்கள் என்றார்.
    Next Story
    ×