search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபவிநாசனம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ள காட்சி.
    X
    பாபவிநாசனம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ள காட்சி.

    3 அணைகள் வறண்டன: திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    திருப்பதியில் உள்ள 5 அணைகளில், 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டன. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் உள்ள 5 அணைகளில், 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டன. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இருப்பில் உள்ள தண்ணீர் 100 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், தனியார் மடங்கள் ஆகியவற்றில் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பக்தர்கள் வரை தங்கி உள்ளனர்.

    திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும், கோவில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் திருமலையில் உள்ள 5 அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    திருமலையில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக பாபவிநாசனம், குமாரதாரா, பசுபுதாரா, கோகர்ப்பம், ஆகாச கங்கை ஆகிய 5 அணைகள் உள்ளன. பாபவிநாசனம் அணையில் 5 ஆயிரத்து 240 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அங்கு தற்போது 2 ஆயிரத்து 699 லட்சம் கியாலன் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. குமாரதாரா அணையில் 4 ஆயிரத்து 858 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதில் 1400 லட்சம் கியாலன் தண்ணீரே இருப்பு உள்ளது. பசுபுதாரா அணையில் 1887 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம்.

    தற்போது அங்கு குறைந்தளவே தண்ணீர் இருப்பு உள்ளது. கோகர்ப்பம் அணையில் 2 ஆயிரத்து 833 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதில் தண்ணீரே இல்லாமல் வறண்டு போய் விட்டது. ஆகாச கங்கை அணையில் 685 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், அதிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் விட்டது.

    கோடையின் வெப்பத்தாலும், மழை பெய்யாததாலும் திருமலையில் கோகர்ப்பம், ஆகாச கங்கை அணைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விட்டது. பசுபுதாரா அணையில் மட்டும் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. அதனை எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியாது. கோகர்ப்பம் அணை கால்வாய்போல் காட்சி அளிக்கிறது. பாபவிநாசனம், குமாரதாரா அணைகளில் உள்ள தண்ணீர் திருமலையில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு 100 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது மழை பெய்தால் தண்ணீர் வரத்து இருக்கும். இல்லையெனில், பக்தர்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்படும் நிலை உருவாகும். தற்போது குறைந்த அளவே பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    5 அணைகளில் மொத்தம் 14 லட்சத்து 303 லட்சம் கியாலன் தண்ணீர் இருப்பு இருக்கும். ஆனால், தற்போது 4 ஆயிரத்து 110 லட்சம் கியாலன் தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால், திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருமலையில் உள்ள ஒட்டுமொத்த அணைகளிலும் தண்ணீர் வறண்டு விட்டால் திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணையில் இருந்து குழாய்கள் மூலம் திருமலைக்கு தண்ணீர் எடுத்து வந்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையே, திருமலையில் மழை பெய்ய வேண்டி வருண யாகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×