search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்: தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தகவல்
    X

    விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்: தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தகவல்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தெரிவிப்பதற்காக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
    சண்டிகார்:

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும், எனவே தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்றும் பல எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று உறுதியாக கூறி வருகிறது.

    இந்த நிலையில் சண்டிகாரில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன் சார்பில் விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து நாங்கள் விளக்கம் அளிப்போம். அப்போது அரசியல் கட்சியினர் மின்னணு எந்திரங்கள் எந்த வகையில் நம்பகத்தன்மையற்றவை? என்பதை நிரூபிக்கலாம்.


    யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் புதிய கருவி ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சில தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் இது பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இனி வரும் தேர்தல்களில் கண்டிப்பாக இந்த கருவி பயன்படுத்தப்படும்.

    இந்த புதிய கருவி வாங்க நிதி பெறப்பட்டு உள்ளது. 15 லட்சம் கருவிகள் வாங்க தீர்மானித்து 2 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கருவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×