search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்
    X

    முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

    முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ’முத்தலாக்’ முறை அமலில் உள்ளது.

    இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதுதொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது, அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.

    சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பா.ஜனதா வாக்குறுதி அளித்தது.

    இந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜனதாவிற்கு இஸ்லாமிய பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர் என அரசியல் வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டது. முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார்கள், காவல் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கிறார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

    கன்னட கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, முத்தலாக் விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது என்பதை இஸ்லாமிய சமூதாயம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


    இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட முத்தலாக் முறைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில் இப்போதும் விவாதப்பொருளாகவே உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நவீனத்திற்கான பாதையை காட்டவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    “தற்போது முத்தலாக் விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சிறந்த பாரம்பரியத்தை பார்க்கையில், இந்தியாவில் உள்ள இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அதிகாரம் வாய்ந்தவர்கள் காலாவதியான நடைமுறைகளை ஒழிக்கவும், புதிய தற்காலிக நடைமுறையை தொடங்குவும் எழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் எனது மனம் நிறைகிறது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இந்த பிரச்சனையில் (முத்தலாக்) இருந்து நம்முடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த மக்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க இஸ்லாமிய சமூதாயத்தினர் அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×