search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘எச்-1 பி’ விசா விவகாரம்: அமெரிக்க நிதி மந்திரியிடம் பிரச்சினை எழுப்பினார் அருண் ஜெட்லி
    X

    ‘எச்-1 பி’ விசா விவகாரம்: அமெரிக்க நிதி மந்திரியிடம் பிரச்சினை எழுப்பினார் அருண் ஜெட்லி

    ‘எச்-1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.
    புதுடெல்லி:

    ‘எச்-1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.

    அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டாடா, இன்போசிஸ், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.

    அந்த நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றன. இதனால் குலுக்கலில் அதிக எண்கள் இடம்பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால் அவர்களுக்கே கூடுதல் விசாக்கள் கிடைக்கின்றன என்று கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின்போது, டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றுகிற மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.

    குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே குற்றம் சாட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கம்பெனிகள் எச்-1 பி விசாதாரர்களுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர்களில் இருந்து 65 ஆயிரம் டாலர் வரையில் (சுமார் ரூ.39 லட்சம் முதல் ரூ.42¼ லட்சம் வரையில்) வழங்குகின்றன. அதே நேரத்தில் இங்கு சிலிக்கான் வேலியில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரின் ஆண்டு சம்பளம் 1½ லட்சம் டாலர் (சுமார் ரூ.97½ லட்சம்) ஆகும்” என கூறினார்.

    அது மட்டுமின்றி இத்தகைய நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த பணியாளர்களை அமர்த்துவதும் இல்லை. ஆனால் அதிக அளவில் ‘எச்-1 பி’ விசாக்களை பெற்று விடுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்ற தனது தேர்தல் பிரசார கோஷத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செயல்பட தொடங்கி உள்ளார்.

    அந்த வகையில் ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் கையெழுத்து போட்டார். இதன் காரணமாக மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே ‘எச்-1 பி’ விசா வழங்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே இது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் வாஷிங்டனில் நேற்று முன்தினம் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கலந்தாலோசனை கூட்டத்தின்போது, அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் இந்திய, அமெரிக்க உறவுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எழுகிற பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

    இதுபற்றி டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், “அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னிடம், இந்தியாவின் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு ‘எச்-1 பி’ விசா வழங்குவது பற்றிய பிரச்சினையை நிதி மந்திரி அருண்ஜெட்லி எழுப்பினார். அத்துடன் அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களும், பணியாளர்களும் செய்து வருகிற பங்களிப்பு பற்றியும் விளக்கினார்” என கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×