search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு தடை - பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு
    X

    சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு தடை - பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு

    சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கி இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகரித்தால் திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரி கூறினார்.
    பெங்களூர்:

    வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள்.

    சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து பேசுவதற்கு என்று சில விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

    அதாவது ஒரு நாள் ஒரு கைதியை 15 நாட்களுக்கு ஒரு தடவையே சந்தித்து பேச முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதியெல்லாம் கடை பிடிக்கப்படவில்லை என்றும் சசிகலா ஒரே மாதத்தில் 12 தடவை பலரை சந்தித்து பேசியதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண்டு பிடிக்கப்பட்டது.

    சசிகலாவுக்கு சிறைத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து சசிகலாவை சந்திக்க வருபவர்களை ஒழுங்குபடுத்த கர்நாடகா மாநில சிறைத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி சசிகலாவை அடிக்கடி சந்தித்து பேச வரும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி சீட்டு பெற்று வந்தாலும் இனி சசிகலாவை சந்தித்து பேச அனுமதிக்க மாட்டோம் என்று பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதை காரணம் காட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர். தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகி விட்டதால் இனி அப்படி சந்திப்பதற்கான வாய்ப்பும் முடங்கி விட்டது.

    இதற்கிடையே சசிகலாவை சந்திக்க வரும் அ.தி.மு.க.வினரை சிறைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சசிகலா வி‌ஷயத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. மற்ற கைதிகளை நடத்துவதை போலவே சசிகலாவையும் நடத்தி வருகிறோம்.

    சசிகலா இந்த சிறைக்கு வந்த புதிதில் தினமும் அவரை பார்க்க நிறைய பேர் வந்த வண்ணம் இருந்தனர். இனி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையும்.

    நாங்களும் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கி உள்ளோம். எண்ணிக்கை அதிகரித்தால் உடனுக்குடன் திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்களை கூட நாங்கள் திருப்பி அனுப்ப தொடங்கி இருக்கிறோம்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    கர்நாடக மாநில சிறைத்துறையின் இந்த திடீர் நடவடிக்கை, சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசி வந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×