search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    X

    தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    சிறை தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புது டெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் சமீபத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

    இவ்வழக்கில் தேர்தல் கமிஷன் தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது. அதில், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிவுக்கு கொண்டுவருவதற்கும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை நடத்துவதற்கான அமர்வு இன்னும் அமைக்கப்படாமல் இருந்தது.



    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ஏற்கனவே உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றியிருப்பதை அரசு சுட்டிக் காட்டியது. எனினும், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×