search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன ரெயில் பெட்டிகளை சென்னையில் தயாரிக்க திட்டம்: ரெயில்வே அமைச்சக அதிகாரி தகவல்
    X

    நவீன ரெயில் பெட்டிகளை சென்னையில் தயாரிக்க திட்டம்: ரெயில்வே அமைச்சக அதிகாரி தகவல்

    மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் பெட்டிகளை சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்வே அமைச்சகம், ‘ரெயில்-2018’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இது, மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டமாகும்.

    இந்த பெட்டிகளை தயாரிக்க முதலில் சர்வதேச டெண்டர் விடப்பட்டது. ஆனால், அது நல்ல பலன் அளிக்காததால், சொந்தமாகவே அப்பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைப்பதுதான் எங்கள் நோக்கம். ஆகவே, ‘ரெயில்-2018’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில், ரூ.200 கோடி செலவில், 2 ரெயில் பெட்டி தொகுப்பை தயாரிக்க உள்ளோம்’ என்றார்.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், 16 ரெயில் பெட்டிகள் கொண்ட முதல் தொகுப்பு தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்டிகள், டெல்லி-லக்னோ பாதையிலோ அல்லது டெல்லி-சண்டிகார் பாதையிலோ இயக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த பெட்டிகள், டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகள் போன்று காணப்படும். ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்கும்போது, கதவுகள் திறந்து மூடும் வகையில் தானியங்கி வசதி பொருத்தப்படும். சன்னல்கள் பெரிதாக இருக்கும். பெட்டிகள், முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதாக இருக்கும். பசுமை கழிப்பறைகள் இடம்பெற்று இருக்கும். ஒரு பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு எளிதில் சென்றுவர முடியும்.

    இனிமையான பயணத்துக்காக, அனைத்து பெட்டிகளிலும் கம்பியில்லா இணையதள வை-பை வசதி உண்டு. பயண நிலவரத்தை தெரிந்து கொள்ள ஜி.பி.எஸ். வசதி பொருத்தப்பட்டு இருக்கும்.

    எல்.இ.டி. விளக்கு வசதிகள் அமைந்திருக்கும். அதிர்வுகள், குலுங்கல் எதுவும் இன்றி பயணம் இனிமையாக அமைய உலகத்தரமான நவீன தொழில்நுட்ப வசதியுடன் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
    Next Story
    ×