search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: எடியூரப்பா
    X

    கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: எடியூரப்பா

    காங்கிரஸ் மேலிடத்துக்கு மந்திரிகள் பணம் வழங்கியது நிரூபணமாகி உள்ளதால், கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
    பெங்களூரு:

    காங்கிரஸ் மேலிடத்துக்கு மந்திரிகள் பணம் வழங்கியது நிரூபணமாகி உள்ளதால், கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்தராமையா மற்றும் மந்திரிகள் பணம் கொடுத்துள்ளதாக நான் கூறியபோது காங்கிரஸ் தலைவர்கள் மறுத்தனர். காங்கிரஸ் எம்.எல்.சி. கோவிந்தராஜ் வீட்டில் கிடைத்த டைரியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை நான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள்.

    காங்கிரஸ் அரசின் ஊழல் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. டைரியில் பெரும்பாலான மந்திரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சித்தராமையா, மந்திரிகள் காங்கிரஸ் மேலிடத்திற்கு பணம் கொடுத்தது நிரூபணமாகி உள்ளது. அதனால் சித்தராமையா உடனடியாக கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.

    ஆதாரங்கள் இருந்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சித்தராமையா கூறினார். இப்போது ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால் சித்தராமையா ஓய்வுபெற வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினால் மந்திரிகளுக்கு கருப்பு பணம் எங்கிருந்து வந்தது? என்ன காரணத்திற்காக கட்சி மேலிடத்திற்கு பணம் கொடுத்தனர் என்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

    சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்துள்ளார் என்று கூறினேன். அப்போது காங்கிரசார் என்னை மனநோயாளி, நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இப்போது நீங்கள் (காங்கிரசார்) எந்த மருத்துவமனைக்கு போகிறீர்கள்.

    நான் ஊழல் செய்திருந்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொன்ன சித்தராமையா இப்போது மவுனமாக இருப்பது ஏன்? சித்தராமையா இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    பெங்களூரு மாநகராட்சியில் ரூ.3,500 கோடி காங்கிரசார் ஊழல் செய்துள்ளனர். இதற்கும் ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். இந்த அரசின் ஊழல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். 
    Next Story
    ×