search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் விடுதி அறையில் பக்தர் தற்கொலை
    X

    திருப்பதியில் விடுதி அறையில் பக்தர் தற்கொலை

    திருப்பதியில் விடுதி அறையில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    நெல்லூர் மாவட்டம் கூடூர்நகரம் வாமுலமிட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 52). இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தார்.

    கோவில் அருகே உள்ள ஏ.என்.சி.தங்கும் விடுதியில் அறை எடுத்துத்தங்கினார். கோவிலில் சாமி தரிசனம் செய்து முடிந்ததும், அறையிலேயே தங்கியிருந்தார். அறையை முன்பதிவு செய்த 24 மணிநேரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என்பது தேவஸ்தானத்தின் விதிமுறை. ஆனால், அவர் அறையை காலி செய்யவில்லை.

    இதுகுறித்து ஏ.என்.சி.தங்கும் விடுதி மேலாளர், திருமலை-2 டவுன் போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விடுதி அறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் ஹரி பிணமாக தொங்கினார். அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், நான் பலரிடம் கடன் வாங்கி உள்ளேன். வாங்கிய கடனை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எனவே நான் தூக்குப்போட்டு தற்கோலை செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக திருமலை-2 டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×