search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    24 வயதில் 8.3 அடி உயரம் அசுரமாக வளரும் ஆந்திரா வாலிபர்
    X

    24 வயதில் 8.3 அடி உயரம் அசுரமாக வளரும் ஆந்திரா வாலிபர்

    ஆந்திர மாநிலத்தில் 24 வயதான வாலிபர் ஒருவர் 8 அடி 3 அங்குலம் வளர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பல்வானி பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணா இவரது மனைவி ராமலட்சுமி, இருவரும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டவர்கள். இவர்களுக்கு சண்முகராவ் (வயது 24) என்ற மகன் உள்ளார்.

    சண்முகராவ் சிறுவயதிலேயே உயரமாக வளரத் தொடங்கினார். இதனால் அவரது வளர்ச்சி தொடர்பாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக வளரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இப்போது 24 வயதான நிலையில் சண்முகராவ் 8 அடி 3 அங்குலம் வளர்ந்து விட்டார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறார். இதனால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

    சண்முகராவ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பள்ளியில் அவரை எல்லோரும் ஏணி என்று கேலி செய்தனர். இதனால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

    தற்போது தெருக்களில் சென்றாலும் அவரை பார்ப்பவர்கள் கேலி செய்கிறார்கள். அதனால் அவர் வெளியில் செல்வதையும் நிறுத்தி விட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமானாலும் கூரை வீடாக இருப்பதால் அவர் வாசல் வழியாக குனிந்தே வெளியே வர வேண்டி இருக்கிறது.

    அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விருப்பமாக உள்ளனர். ஆனால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. தாங்கள் வறுமையில் இருப்பதால் மகனுக்கு என்ன நோய்? ஏன் இவ்வளவு அசுரமாக வளர்கிறார் என்று ஆஸ்பத்திரியில் காட்டி சிகிச்சை பெற முடிய வில்லையே என்று பெற்றோர் பரிதவிப்புடன் உள்ளனர்.
    Next Story
    ×