search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம்
    X

    ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம்

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
    ஐதராபாத்:

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தொடரப்பட்டு, 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வெளியானது.

    ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா வாங்கிய சொகுசு பங்களாக்களை கையகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது.

    கொடநாடு எஸ்டேட், பையனூர் பங்களா முடக்கப்படும் பட்டியலில் உள்ளது. இவை தவிர மேலும் பல சொத்துக்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போயஸ்கார்டன் வீடு பற்றி இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

    இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் திராட்சைத் தோட்டம் பற்றி தகவல்கள் தெரியாமல் இருந்தது. தற்போது அவை மற்றவர்கள் பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஜெயலலிதா 1968-ம் ஆண்டு தன் பெயரிலும் தன் தாயார் பெயரிலும் 14.50 ஏக்கர் விவசாய இடத்தை வாங்கி திராட்சைத் தோட்டம் அமைத்தார். 1967-ல் அவர் ஸ்ரீநகர் காலனியில் 14 ஆயிரம் சதுர அடியில் பங்களா வாங்கினார்.

    செகந்திராபாத்தில் உள்ள ராதிகா காலனியிலும் ஜெயலலிதா ஒரு பங்களா வாங்கியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் தன் வேட்புமனுவில் இந்த சொத்துக்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் செகந்திராபாத் ராதிகா காலனியில் உள்ள பங்களா சசிகலா பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பங்களாவில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர்கள் வெளியேறிய நிலையில், தற்போது கடந்த 3 மாதங்களாக அந்த பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பங்களாவுக்கான சொத்து வரி கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளதாம். அதை உடனே செலுத்தும்படி கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் அந்த பங்களா உரிமையாளர் என்று சசிகலா பெயர் உள்ளது. இதையடுத்தே அந்த பங்களா ஜெயலலிதா பெயரில் இருந்து சசிகலாவுக்கு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×