search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறவிலேயே நான் காங்கிரஸ்காரன்: நவ்ஜோத்சிங் சித்து
    X

    பிறவிலேயே நான் காங்கிரஸ்காரன்: நவ்ஜோத்சிங் சித்து

    நான் பிறவியிலேயே காங்கிரஸ்காரன் என்றும் எனது தாய்வீட்டுக்கு நான் மீண்டும் திரும்பி வந்துள்ளேன் என நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. பா.ஜனதா எம்.பி.யாக இருந்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகினார்.

    இந்த நிலையில் சித்து நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக இணையும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடந்தது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரியும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான அஜய் மக்கன் பங்கேற்று சித்துவுக்கு காங்கிரஸ் சால்வை அணிவித்து கொடியை வழங்கினார்.

    பின்னர் சித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பிறவியிலேயே காங்கிரஸ்காரன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவன். இது என் தாய் கழகம். எனது தாய் வீட்டுக்கு நான் மீண்டும் திரும்பி வந்து உள்ளேன்.

    லல்லுவும், நிதிஷ்குமாரும் இணைந்து செயல்படும் போது நானும், அம்ரீந்தர் சிங்கும் இணைந்து செயல்பட முடியாதா? யாருடனும் இணைந்து நான் தேர்தல் பணியாற்ற தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும்.

    பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல்- பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். பா.ஜனதா கட்சி கூட்டணியை தேர்ந்து எடுத்தது. நான் பஞ்சாபை தேர்ந்து எடுத்தேன்.

    பஞ்சாப்பை மீட்டு எடுக்கவே நான் காங்கிரசில் இணைந்துள்ளேன். பஞ்சாப்பை விற்கும் பாதலின் முயற்சியை மக்களிடம் விரிவாக தெரிவிப்பேன். இந்த அரசு போதை மருந்து கடத்தலுக்கு துணை போகிறது. போதை மருந்து கடத்தல்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    பஞ்சாப் மக்களின் நலனுக்காகவும், சுயமரியாதைக்காகவும் நான் போராட முடிவு செய்து விட்டேன். தனிப்பட்ட காரணத்துக்காக எனது போராட்டம் இருக்காது.

    பிரகாஷ்சிங் பாதல் ஆட்சியை விட்டு ஓடுவார். அவர் இருக்கைக்கு பஞ்சாப் மக்கள் வர தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 4-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்து போட்டியிடுகிறார். அவர் காங்கிரசில் இணைந்தது அந்த கட்சிக்கு கூடுதல் பலத்தை அளித்து உள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே முதல்-மந்திரி வேட்பாளராக அம்ரீந்தர்சிங் உள்ளார். தற்போது பிரபலமான சித்துவும் தேர்தலில் நிற்பதால் அந்த கட்சியில் அதிகார போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×