search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 ரூபாய் நோட்டை வாங்க தந்தை மறுத்ததால் மகள் கற்பழிப்பு
    X

    500 ரூபாய் நோட்டை வாங்க தந்தை மறுத்ததால் மகள் கற்பழிப்பு

    உத்தரபிரதேசத்தில் ரூ.500 நோட்டை தந்தை வாங்க மறுத்ததால் மகள் கற்பழிக்கப்பட்டாள்.
    பரேலி:

    மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    இங்கு பதாம் என்ற இடத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் பசு மாட்டு வரட்டிகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த திங்கட்கிழமை அதே ஊரைச் சேர்ந்த 3 பேர் வந்து வரட்டி வாங்கி விட்டு பழைய ரூ.500 கொடுத்தனர். அதை அவர் வாங்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் வரட்டி விற்கும் வியாபாரியை பழி வாங்க திட்டமிட்டனர். சம்பவத்தன்று அவர் தனது மனைவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்தாள்.

    இதை நோட்டம் விட்ட அந்த 3 பேர் கும்பல் வீடு புகுந்து இளம் பெண்ணை கடத்திச் சென்றனர்.

    அருகில் உள்ள வயல் வெளியில் வைத்து சிறுமியை கற்பழித்தனர். 3 பேரில் ஒருவர் 9-ம் வகுப்பு மாணவர் ஆவார்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பியதும் மகளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் கடத்தல், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மாணவர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×