search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்: மம்தா பானர்ஜி
    X

    பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்: மம்தா பானர்ஜி

    பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு, மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு, மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்தார்.

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வங்கிகளில் போதிய பணம் இல்லாததாலும், பணத்தை எடுப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் கடந்த 10 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சினைக்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை 2 நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மத்திய அரசுக்கு சில முக்கிய யோசனைகளையும் தெரிவித்தார்.

    அவர் நிருபர்களிடம் கூறியாதாவது:-

    நாடு இதுவரை முன்எப்போதும் கண்டிராத நெருக்கடியை சந்தித்து உள்ளது. அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாக அதனால் ஏற்படும் சிக்கலை சமாளிக்க மத்திய அரசு எந்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை.

    இதில் மத்திய அரசு எதையும் திட்டமிட்டு செய்ததாகவும் தெரியவில்லை. தற்போது இதை அவர்கள் கவுரவ பிரச்சினையாக கருதுகின்றனர்.

    வங்கியில் பணத்தை எடுப்பதற்காக மத்திய அரசு தினமும் புதுப்புது நிபந்தனைகளை விதிப்பதை நிறுத்தவேண்டும். இதனால் சாதாரண மக்கள் கடுமையான தொல்லைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    செல்லாத ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பால் வியாபாரிகளின் மீன்களும், காய்கறிகளும் அழுகிவிட்டன. சிறுவணிகம் அடியோடு பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளால் விதைகளை கொள்முதல் செய்து விதைக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் நாட்டில் நெல், கோதுமை உற்பத்தி இல்லாமல் போகும்.

    குடும்பத் தலைவிகள் சிறுசிறு தொகையை சேமிக்க உண்டியல் வைத்திருப்பார்கள். தற்போது அந்த உண்டியலை உடைக்கும் நிலைக்க தள்ளப்பட்டு இருப்பார்கள். நாட்டின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வங்கி கிளைகளோ, தபால் அலுவலகங்களோ இல்லை என்பதை மத்திய அரசு நினைத்து பார்க்கவில்லை. இதுபோன்ற நிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இருப்பது மோசமானது.

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நிலுவைத் தொகையை பெற முடியவில்லை. மத்திய அரசின் அறிவிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மத்திய அரசு புதுப்புது விதிமுறைகளை அறிவிக்க மட்டுமே செய்கிறது. ஆனால் எந்த செயல்பாட்டையும் காணவில்லை. நமக்கு பேச்சுத் தேவையில்லை.

    தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தடுக்க மத்திய அரசுக்கு சில வலுவான யோசனைகளை தெரிவிக்கிறேன். பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். புதிய ரூ.500 மற்றும் பழைய ரூ.500 நோட்டுகள் மக்களுக்கு தேவைப்படும் என்பதால் அவை புழக்கத்தில் இருக்கவேண்டும்.

    டிசம்பர் 30-க்குள் நிலைமை சீரடைந்துவிட்டால் ரூ.1,000 நோட்டின் மீதான தடை தொடரலாம். ரூ.100, ரூ.50, ரூ.10 நோட்டுகள் அதிக அளவில் எளிதாக கிடைக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும். இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அடுத்த 72 மணி நேரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம். புதிய ரூ.2,000 நோட்டு சாமானிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது.

    இந்த பிரச்சினையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். இதில் எங்களுக்கு எந்த ‘ஈகோ’வும் கிடையாது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவே எங்கள் கட்சி விரும்புகிறது. அதே நேரம் இதில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை.

    இதற்கு முன்பு இதுபோன்று பல விசாரணைகள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் எதுவும் நடந்துவிடவில்லை. தவறு செய்தவர்கள் நீதிக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படவும் இல்லை. மேலும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்பது காலத்தை தாமதம் செய்யத்தான் உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×