search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூட்டிக் கிடக்கும் கோர்ட்டு அறைகள்: நீதிபதிகளை நியமிக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
    X

    பூட்டிக் கிடக்கும் கோர்ட்டு அறைகள்: நீதிபதிகளை நியமிக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுத்தும் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், பல கோர்ட்டு அறைகள் நீதிபதிகள் இல்லாமல் பூட்டிக்கிடப்பதாக வேதனை தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நீண்டகாலமாக காலியாக இருக்கும் இந்த பணியிடங்களை, கொலிஜியம் பரிந்துரைப்படி நிரப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    ஐகோர்ட்டுகளில் உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசும், சுப்ரீம் கோர்ட்டும் பரஸ்பரம்  மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியையும், வேதனையையும் வெளியிட்டது. இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. கர்நாடகா ஐகோர்ட்டில் பல கோர்ட்டு அறைகள் நீதிபதிகள் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. இவ்வாறு நீதித்துறைக்கு பூட்டுப்போட நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் இயக்கத்தையும் உங்களால் நிறுத்த முடியாது.

    முன்பு நிறைய நீதிபதிகள் இருந்தும் கோர்ட்டு அறைகள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று கோர்ட்டு அறைகள் உள்ளன, நீதிபதிகள் தான் இல்லை. கோர்ட்டு அறைகளை மூடி நீதியை விரட்டி விடுகிறீர்கள்.

    இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் நிறைய விருப்பு வெறுப்புகள் உள்ளன. நிறுவனங்களிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இது எந்த ஒருவரின் ஈகோ சம்பந்தப்பட்டதும் இல்ல. இது தனிப்பட்டதும் அல்ல. மாறாக அவதியுறும் நீதித்துறை சம்பந்தப்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இதற்கு பதிலளிக்கையில், 'நீதிபதிகள் நியமன தாமதத்துக்கு நடைமுறை குறிப்பாணையை இறுதி செய்யாததும் ஒரு காரணம்' என்று கூறினார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'நடைமுறை குறிப்பாணை மூலம் நீதிபதிகள் நியமனத்தில் எதுவும் செய்ய முடியாது. எனவே அதை காரணம் காட்டி நீதிபதிகள் நியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க முடியாது. இந்த குறிப்பாணை இல்லாமல் நீதிபதிகள் நியமன நடைமுறையை செயல்படுத்துவதாக நீங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே இதில் எந்தவித முட்டுக்கட்டையும் இருக்கக்கூடாது' என்று கூறினர்.

    மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறையில் மெத்தனப்போக்கை கைவிட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இல்லையென்றால் பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டம், நீதித்துறை செயலாளர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, நீதிபதிகள் நியமன நடைமுறையில் கூடுதல் முன்னேற்றத்தை விரைவில் பார்க்கலாம் என உறுதியளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 11-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×