search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் 1.5 கி.மீட்டர் தூரம் ஊடுருவி கமாண்டோ வீரர்கள் தாக்குதல்: 55 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு
    X

    பாகிஸ்தானில் 1.5 கி.மீட்டர் தூரம் ஊடுருவி கமாண்டோ வீரர்கள் தாக்குதல்: 55 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

    ஆக்கிரமிப்பு பாகிஸ்தானுக்குள் 1.5 கி.மீ. வரை ஊடுருவி இந்திய கமாண்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

    ஏற்கனவே பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில் உரி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது. ஆனால் இவற்றையெல்லாம் நிராகரித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரி தாக்குதல் இந்தியாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என கூறி இந்தியாவை சீண்டி விட்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்தவாறுதான் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த முகாம்களை தாக்கி அழிக்க இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ என்ற பெயரில் ராணுவத்தின் கமாண்டோ படை பிரிவு தாக்குதலுக்கு ஆயத்தமானது. நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு சுமார் 200 வீரர்கள் 8 குழுக்களாக பிரிந்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தனர். அங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

    விமானப்படை போர் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் இருந்தவாறு தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது குண்டு மழை பொழிந்தன. பாராசூட்களில் இறங்கியும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

    இந்த அதிரடி தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன. முதலில் 5 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. நேற்று இரவு வெளியான தகவல் அடிப்படையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் பதுங்கி இருந்த 40 முதல் 55 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை 4.30 மணிக்கு முடிந்தது. இந்திய வீரர்கள் 4 மணி நேரத்தில் தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முகாம் திரும்பினார்கள்.

    இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை.

    வீரர்கள் பத்திரமாக திரும்பும் வரை எந்த உதவிக்கும் தயார் நிலையில் இந்திய எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் பலியானார்கள். இதன்மூலம் தீவிரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவமும் பக்க பலமாக இருந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் நேற்று மத்திய மந்திரிசபையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை கூட்டி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் தீவிரவாதிகள் முகாம் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ராணுவ தளபதிகள் விளக்கி கூறினார்கள்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தக்கபதிலடி கொடுத்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடினார்கள். ராணுவத்துக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டனர்.

    1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் போது தான் இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இப்போது 45 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப்படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    போர் அல்லாத சமயங்களில் இந்திய வீரர்கள் எல்லை மீறியதே கிடையாது. முதல் முறையாக பாகிஸ்தானை எச்சரிக்கை விதமாகவும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தற்போது தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால் காஷ்மீர் முதல் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

    இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் மூத்த மத்திய மந்திரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகளும், பாதுகாப்புதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×