search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம்: உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
    X

    காவிரி விவகாரம்: உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை

    காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டம் தீர்வின்றி முடிவுக்கு வந்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் காவிரியில் கடந்த 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.நேற்று முன்தினம் இந்த வழக்கில் தொடர்ந்து 30-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து டெல்லியில் இன்று தமிழக - கர்நாடக அரசுகளின் பேச்சு வார்த்தைக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று காலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான சமரச கூட்டம் நடந்தது.

    இதில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரை வாசிக்கப்பட்டது.  தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும்  அந்த உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கர்நாடகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி. பட்டீல், தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்ட 5 பேர் குழு பங்கேற்றது.கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது குறித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நீர் திறக்க முடியாது என்று சித்தராமையா கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த கூட்டம்  இறுதி வரை எந்த முடிவும் எட்டப்படாமலே முடிவுக்கு வந்துள்ளது.

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, “ தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று சித்தராமையா கூறியிருந்தார். நீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா கோரினார். தமிழகத்திற்கு நீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண முடியவில்லை. இரு தரப்பு கருத்துக்களும் உச்ச நிதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×