search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய மோடி தலைமையில் செப். 29-ல் ஆலோசனை கூட்டம்
    X

    பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய மோடி தலைமையில் செப். 29-ல் ஆலோசனை கூட்டம்

    பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 29-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது.

    இதனிடையே, கடந்த சனிக்கிழமை பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

    இதனையடுத்து, சிந்து நதி நீர் பங்கீடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானுக்கான நீரின் அளவை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 29-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
     
    முன்னதாக, உரி தீவிரவாத தாக்குதலுக்கு பிறகான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசிக்க சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நேற்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×