search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி. சசிகலா புஷ்பா விசாரணைக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    எம்.பி. சசிகலா புஷ்பா விசாரணைக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

    பாலியல் வழக்கு மற்றும் முன்ஜாமீன் மனுவில் போலி ஆவணங்களை இணைத்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சசிகலா புஷ்பா எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மேல்சபை அ.தி.மு.க. எம்.பி.யான சசிகலா புஷ்பா கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சசிகலாபுஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் சசிகலாபுஷ்பா, அவரது தாய் கவுரி, கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது வீட்டில் வேலை பார்த்த திசையன்விளை ஆணைக்குடியை சேர்ந்த சகோதரிகள் பானுமதி, ஜான்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலாபுஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சசிகலாபுஷ்பா உள்ளிட்ட 4 பேரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலாபுஷ்பா தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை கடந்த மாதம் 26-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் 29-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் 6 வாரங்கள் வரை அவர்களை கைது செய்ய தடையும் விதித்தது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்த சசிகலா புஷ்பா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் குடும்பத்துடன் ஆஜரானார்.

    இதற்கிடையே முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்களை சசிகலா புஷ்பா தாக்கல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் மதுரை கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த 14-ந்தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி., கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்தது போலியான ஆவணங்களை இணைத்தது, மோசடி செய்தல் என்பது உள்ளிட்ட பிரிவுகளில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சசிகலா புஷ்பா மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகின்ற அக்டோபர் 3-ம் தேதி தூத்துக்குடி போலீஸ் நிலையத்திலும், 7-ம் தேதி மதுரை கே.புதூர் போலீஸ் நிலையத்திலும் சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும், அக்டோபர் 3 மற்றும் 7-ம் தேதிகளில் போலீஸ் விசாரணைக்கு வரும் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடுமாறு தமிழக போலீசாருக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.
    Next Story
    ×