search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்
    X

    வாணியம்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

    வாணியம்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த ராபின் (வயது17) என்ற வாலிபர் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுத்து வந்தார்.

    மாணவி நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் பஸ் மூலம் வீட்டுக்கு வந்தார்.

    பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வீடு உள்ளதால் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ராபின் அந்த மாணவியிடம் சென்று உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்.

    ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்தார். இதனால் அந்த வாலிபர் மாணவியின் கையை பிடித்து இழுத்து வற்புறுத்தி உள்ளார். இதனால் இரு வருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த ராபின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் காது, தொடை, கையில் வெட்டினார்.

    ரத்த வெள்ளத்தில் துடி துடித்த மாணவி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ராபின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மாணவியை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×