search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பாதயாத்திரை பக்தர்களை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்
    X

    திண்டுக்கல் அருகே பாதயாத்திரை பக்தர்களை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்

    திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

    கன்னிவாடி:

    மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது20). இவர் விரகனூர் சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து (22). இவர் மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன்கடை வைத்து நடத்தி வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    செம்பட்டி-பழனி சாலையில் இன்று காலை அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து தாக்கியது.

    பாதயாத்திரையாக வந்ததால் அவர்கள் சற்று சோர்வுடன் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். வைரமுத்துவிற்கு 8 இடங்களிலும், விஜய்க்கு 3 இடங்களிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    உடனே அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற ஓடினர். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் தப்பி ஓடியது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைரமுத்து செல்போன் விற்றது தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. எனவே அதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மயக்க நிலையில் இருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×