search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, டெல்லியில் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
    X

    சென்னை, டெல்லியில் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    சென்னை மற்றும் டெல்லியில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள சோதனை நடத்தி வருகின்றனர். #KartiChidambaram #EDraids
    சென்னை:

    முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டில் இன்று காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல் டெல்லி, காரைக்குடியில் உள்ள வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான (எப்ஐபிபி) அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற சட்டவிரோதமாக அனுமதி அளிக்க ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்,சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரும் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இன்று மீண்டும் அவரது வீடுகளில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  #KartiChidambaram #EDraids #tamilnews
    Next Story
    ×