search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்தவ சமுதாய பாதுகாப்பில் அ.தி.மு.க. அக்கறையோடு இருக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    கிறிஸ்தவ சமுதாய பாதுகாப்பில் அ.தி.மு.க. அக்கறையோடு இருக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

    கிறிஸ்தவ சமுதாய பாதுகாப்பில் அ.தி.மு.க. அக்கறையோடு இருக்கும் என சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
    சென்னை:

    கிறிஸ்தவ சமுதாய பாதுகாப்பில் அ.தி.மு.க. அக்கறையோடு இருக்கும் என சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

    அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் வரவேற்புரையாற்றினார். இதில் தென்னிந்திய திருச்சபை (சென்னை பேராயம்) பேராயரின் ஆயர் மேன்யல் டைட்டஸ், செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்ற பிரதம பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ், சென்னை செபி திருமண்டல பேராயர் மோகன்தாஸ், மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி., அமைச்சர் பென்ஜமின், முஸ்லிம் முன்னேற்ற பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டினார்கள். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு எப்பொழுதும் மதசார்பற்ற கொள்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஏசுபிரான் தன் வாழ்நாள் எல்லாம் பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். நாமும் பணிவுடனும், அன்புடனும் வாழும் போது உயர்வு நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடவேண்டாம்.

    எம்.ஜி.ஆர். வழியில், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் நடைபோடும் அ.தி.மு.க. கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் எப்பொழுதும் அக்கறையோடு இருக்கும் என்பதை கிறிஸ்தவ சமூகத்திற்கு நான் உறுதிபடக் கூற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    மனிதநேய உணர்வில் தொடங்கியது தான் அ.தி.மு.க.; ஏசுபிரான் போதனையின் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார் எம்.ஜி.ஆர்.; அனைத்து சமயத்தையும் பெரிதாக மதித்தார் ஜெயலலிதா. சிறுபான்மை மக்கள் மீது அக்கறையும், கிறிஸ்தவ மக்கள் மீது ஜெயலலிதா பாசம் வைத்தார். அந்த வகையில், ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதற்கு, கிறிஸ்தவர்களுக்கு வழிவகை செய்து கொடுத்தார். அதை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும், ஆதரவாகவும் அ.தி.மு.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு கூடுதல் ஆட்களை அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இந்த அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தனர். 
    Next Story
    ×