search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலுக்கு பின் கடலுக்கு சென்ற குளச்சல் மீனவர்கள் 3 பேர் மாயம்
    X

    புயலுக்கு பின் கடலுக்கு சென்ற குளச்சல் மீனவர்கள் 3 பேர் மாயம்

    ஒக்கி புயல் தாக்குதலுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களில் மூன்று பேர் தற்போது மாயமாகி உள்ளதால் கடலோர காவல் படையினர் படகு மூலம் அவர்களை தேடி வருகிறார்கள்.
    குளச்சல்:

    ஒக்கி புயல் குமரி மாவட்டத்தை கடந்த 30-ந்தேதி தாக்கியது. அப்போது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். அதேசமயம் 359 மீனவர்கள் தொடர்ந்து மாயமாக உள்ளனர். அவர்கள் நிலை என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் தொடர்ந்து சோகத்தில் உள்ளனர்.

    புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். 15 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரி, குளச்சல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அவர்களில் 3 மீனவர்கள் தற்போது மாயமாகி விட்டனர்.

    குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த சவேரியார் பிச்சை (வயது 53), சிம்சன் ஜோஸ் (31), லியோன்நகரை சேர்ந்த அந்தோணி அடிமை (60) ஆகிய 3 பேரும் வள்ளம் ஒன்றில் குளச்சல் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை அவர்கள் கரைதிரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து பங்குத்தந்தை எட்வினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தூத்துக்குடியில் இருந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சூறைக் காற்று வீசி வருகிறது. காற்றின் வேகத்தில் மீனவர்கள் திசை மாறி சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இருப்பினும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
    Next Story
    ×