search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியில் இல்லாவிட்டாலும் உங்களுக்காக குரல் கொடுப்போம்: குமரியில் ராகுல் பேச்சு
    X

    ஆட்சியில் இல்லாவிட்டாலும் உங்களுக்காக குரல் கொடுப்போம்: குமரியில் ராகுல் பேச்சு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்தித்த ராகுல் காந்தி, மீனவர்களுக்கென தனி அமைச்சகம் இருந்திருந்தால் உங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள். பொருளிழப்பு, உயிரிழப்பை சந்தித்த விவசாயிகள் மற்றும் மீனவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி இன்று குமரி மாவட்டம் வருவதற்காக இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். பகல் 11.40 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவர் அங்கிருந்து கார் மூலம் கேரள கடற்கரை கிராமங்களான விழிஞ்ஞம், பூத்துறை பகுதிக்கு சென்றார். அங்கு ஒக்கி புயலால் உயிரிழந்த கேரள மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் 1.05 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வந்தார். தூத்தூரில் உள்ள புனித யூதா ததேயூ கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்றார். இப்பகுதியில் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் புயலில் சிக்கி பலியான மீனவர் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் குமரி மாவட்ட விவசாயிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். அப்போது புயலில் சாய்ந்த மரங்கள், மழை நீரில் மூழ்கிய பயிர்கள், இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து மக்களிடையே அவர் பேசியதாவது:-

    மிகுந்த துக்கத்தோடு இங்கே வருகை தந்துள்ளேன். மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் வலியை அறிய முடிகிறது. குஜராத் தேர்தலால் கன்னியாகுமரிக்கு வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனாலும், அவரகளிடம் உங்களுக்காக குரல் கொடுப்போம்.

    நாடு முழுவதும் மீனவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மீனவர்களுக்கென தனி அமைச்சகம் இருந்திருந்தால் உங்களது பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், ராகுல்காந்தி மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கு மாநில காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணிக்கு அவர், விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    குமரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி வருவதை யொட்டி மேற்கு மாவட்டம் மற்றும் கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×