search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். மையத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: சொகுசு காரில் வந்த வட மாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
    X

    ஏ.டி.எம். மையத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: சொகுசு காரில் வந்த வட மாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது

    கோவை அருகே ஏ.டி.எம். மையத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் அதிரடி வேட்டையில் சொகுசு காரில் வந்த வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாமக்கல்:

    கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து 200 -ஐ கொள்ளையடித்து சென்றனர்.

    அதுபோல் அன்று இரவு பீளமேட்டில் தனியார் கல்லூரி அருகே உள்ள ஆக்சி வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அன்று அதிகாலை 1.15 மணிக்கு தண்ணீர் பந்தல் ரோட்டில் இன்டஸ்இன்ட் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து ரூ.3½ லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் தான் என்பது தெரியவந்தது.

    இந்த கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 6 பேர் நாமக்கல் வழியாக வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியில் கோவை மற்றும் நாமக்கல்லை சேர்ந்த போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது இன்று அதிகாலை 5 மணி அளவில் வெளிமாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை போலீசார் மடக்கி பிடித்தனர். முதலில் வந்த காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக இந்தியில் பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அந்த காரில் பயங்கர ஆயுதங்களும் இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

                                                          கொள்ளையர்கள் வந்த கார்

    பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. அந்த காரை போலீசார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். எனினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

    சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேடு என்ற இடத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் அருகில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 3 பேரும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடினர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் 2-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என்று 50-க்கும் மேற்பட்ட போலீசார் பொம்மைகுட்டை மேடு, மேற்கு பாலப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏற்கனவே ராஜஸ்தானுக்கு சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் தற்போது பதுங்கிய கொள்ளையர்களால் போலீசார் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதால் புதிய வியூகம் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதன்படி போலீஸ் மோப்பநாய் பொய்கை பொம்மகுட்டைமேடு பகுதிக்கு அழைத்து வரப்பட்டது.

    அப்போது அந்த மோப்பநாய் கொள்ளையனின் கால் தடத்தை மோப்பம் பிடித்து கொண்டு ஓடியது. மேற்கு பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மோப்பநாய் ஓடி சென்று நின்றது. அந்த வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தது.

    அந்த வீட்டின் மேல் மொட்டை மாடியில் கொள்ளையன் ஒருவன் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அவனை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அந்த வீட்டை சுற்றிலும் ஏராளமான வீடுகள் இருந்ததால் உடனடியாக போலீசார் வீட்டுக்குள் சென்றால் வேறு வீட்டுக்குள் புகுந்து அவன் தப்பி சென்று விடுவான் என்று கருதி போலீசார் உடனடியாக வீட்டுக்குள் செல்லவில்லை. அது மட்டுமல்லாமல் கொள்ளையன் கையில் ஏதேனும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

    இதனால் போலீசார் அந்த கொள்ளையனை வீட்டை விட்டு வெளியே வருமாறு மைக்கில் பேசி அழைத்தனர். ஆனால் அவன் வெளியே வரவில்லை. நாங்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டோம் என்றும் பயப்பட வேண்டாம், என்றும் ஆயுதங்கள் எதுவும் இருந்தால் ஒப்படைத்து விடும்படியும் போலீசார் இந்தியில் கூறினார்கள். மீண்டும் அவன் வெளியே வர மறுத்துவிட்டான்.

    இதனால் போலீசார் ஆளில்லாத சிறிய விமானங்களை வரவழைத்தனர். நாமக்கல்லில் உள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் உள்ள விமானத்தையும், பரமத்திவேலூரில் திருமண விழாக்களுக்கு புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ அதிபரின் விமானத்தையும் வரவழைத்தனர். அந்த விமானங்களை கொள்ளையன் பதுங்கி இருந்த வீட்டின் மேல் பறக்க செய்து கொள்ளையன் ஆயுதம் வைத்திருக்கிறானா? என்பதையும் அவன் பதுங்கி இருக்கும் இடத்தையும் துல்லியமாக பார்த்தனர்.

    விமானங்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்து வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த போலீசார் அந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.



    அவனது பெயர் சுபேதரன் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய மற்ற எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. கொள்ளையன் சுபேதரன் அங்கு தயார் நிலையில் வைத்திருந்த ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 கொள்ளையர்கள் அந்த பகுதியை அடுத்த மேற்கு பாலப்பட்டி காட்டு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கும் அந்த ஆள்இல்லாத 2 விமானங்களை வைத்து கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டு பிடித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் துணையுடன் போலீசார் அந்த 2 கொள்ளையர்களையும் மடக்கிப்பிடித்து அழைத்துச் சென்றனர்.

    இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை நடந்த அதிரடி வேட்டையில் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கேஸ்வெல்டிங் எந்திரம் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டியதிருப்பதால் அவர்களை கோவைக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    தீரன் அத்தியாயம்-1 படத்தில் வடமாநில கொள்ளையர்களை நடிகர் கார்த்தி விரட்டிச் சென்று வேட்டையாடுவது போல சினிமா பாணியில் நாமக்கல் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×