search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ராணுவ பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தகவல்
    X

    இந்தியாவில் ராணுவ பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தகவல்

    ‘இந்தியாவில் ராணுவ பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’, என ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி அனுபவம் குறித்து, பத்திரிகையாளர்களுடன், ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதுகுறித்து, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி சம்ரிதி கூறியதாவது:-

    நாட்டில் உள்ள ராணுவம், கப்பல் மற்றும் விமானம் என முப்படைகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமாகும்.

    தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள் 20 பேர் பயிற்சிக்காக கடந்த வாரம் சென்னை வந்தனர். 20 நாட்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு துப்பாக்கிச்சுடுதல், பல்வேறு வகையான உடற்பயிற்சிகள், நிர்வாகம், ஆங்கில மொழித்திறன் கற்றல், ஆயுதங்களை கையாள்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.



    தக்‌ஷின் சித்ரா கலை பண்பாட்டு மையத்துக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு நம்முடைய கலாசாரம் குறித்து விளக்கப்படும். 20 நாட்கள் பயிற்சியை முடித்துவிட்டு வரும் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் தங்களுடைய நாட்டுக்கு திரும்பி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பயிற்சி குறித்து, ஆப்கானிஸ்தான் நாட்டு தேசிய ராணுவத்தை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:-

    உலகின் தலைசிறந்த ராணுவ பயிற்சி அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இங்கு வந்து பயிற்சி பெறுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் நாடு தலிபான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டது.

    ஏழை மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இன்னும் பயங்கரவாதிகளால் எங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், நாங்கள் பெறும் இத்தகைய பயிற்சியின் மூலம் மிக தைரியமாக போரிட்டு அவர்களை ஒடுக்க முடியும். இந்தியாவில் இருந்து மேலும் அதிகளவு பயிற்சி பெற விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×