search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் நிதி நிறுவனத்தில் ஏல சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி: மேலாளர் கைது
    X

    நாமக்கல் நிதி நிறுவனத்தில் ஏல சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி: மேலாளர் கைது

    நாமக்கல்லில் பைனாஸ் நிறுவனமும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகம் ஒன்றின் முதல் மாடியில் திரிபுரா சிட் அண்ட் பைனான்ஸ் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதிநிறுவனம் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது.

    இதில் பல முதலீட்டாளர்கள் தினசரியும், சிலர் மாதம் ஒருமுறையும் பணம் செலுத்தி வந்தனர். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை, ஓட்டல், டீக்கடை உரிமையாளர்கள் என பலரும் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

    இதற்கிடையே சமீபத்தில் 20 மாத சீட்டு என்ற அடிப்படையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பணத்தை வசூல் செய்ய 5-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பணியாளர்கள் நேரடியாக சென்று முதலிட்டாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து வந்தனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும். 6 மாத முடிவில் சீட்டின் மொத்த மதிப்பில் பாதி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என நிதி நிறுவனத்தினர் அறிவித்தனர். இதில் பலரும் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பின் நிறுவனத்தில் இருந்து யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. மேலும் திரிபுரா சிட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பணம் பெற கலெக்சனுக்கு வரும் பணியாளர்களிடம் கட்டிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டு வந்தனர். அவர்கள் ஏதோ காரணம் சொல்லி சமாளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மூடப்பட்ட நிதிநிறுவனத்தை அதில் பணியாற்றி வந்த மண்டல மேலாளர் ராஜேஷ் திறந்து உள்ளே சென்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் அதில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு தாங்கள் செலுத்திய பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மண்டல மேலாளர் ராஜேஷிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர், வருகிற 28-ந் தேதிக்குள் அனைவரின் பணத்தையும் திருப்பி கொடுப்பதாக கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த முதலீட்டாளர்கள், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த சில பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    அந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான அடையாளமாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் அங்கு சிதறி கிடந்தன. அதில் நமது புத்தகம் உள்ளதா? என சில முதலீட்டாளர்கள் தேடுவதையும் காண முடிந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து முதலீட்டாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மேலாளர் ராஜேசையும் அவர்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக பணம் கட்டி ஏமாந்த சிலுவம்பட்டியை சேர்ந்த செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் மேலாளர் ராஜேஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    இதுவரை பணம் கட்டி ஏமாந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

    பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறியதாவது:-

    திரிபுரா சிட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் எல்லாம் மாவட்டங்களிலும் உள்ளது. இந்த நிதி நிறுவனம் நாமக்கல்லில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. நாங்கள் மாதம் மாதம் பணம் செலுத்தி வந்தோம். தொடக்கத்தில் சரியாக முதிர்வு தொகையை வழங்கி வந்தனர். ஆனால் சமீபகாலமாக முதிர்வு தொகை வழங்கவில்லை.

    முதிர்வு தொகைக்காக நிதிநிறுவனம் சார்பில் சிலருக்கு காசோலை வழங்கப்பட்டது. அந்த காசோலைகளும் நிதிநிறுவன கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. கோடிக்கணக்கில் எங்களின் பணத்தை மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணம் திரும்ப கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டர் முன்பு செயல்பட்டு வந்த வின்ஸ்டார் ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாயை சுருட்டியது.

    இது போல் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் கிட்டதட்ட 13 ஆயிரம் பேரிடம் இருந்து 2000 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்தது.

    இதன் தொடர்ச்சியாக நாமக்கல்லில் பைனாஸ் நிறுவனமும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×