search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயால் அவதிப்பட்ட தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்
    X

    நோயால் அவதிப்பட்ட தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்

    சேலத்தில் நோயால் அவதிப்பட்ட தந்தையை மகளே கருணை கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 90). நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

    இந்த நிலையில் ஒரு காலி இடத்தில் முதியவர் ஒருவர் பிணம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது மகள் கமலாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கொன்று புதைக்கப்பட்ட பழனிசாமியின் மகள் கமலா அரிசிபாளையம் மாணிக்கம் தெருவில் உள்ள மஞ்சள் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    அவரது தந்தை பழனிசாமிக்கு வயதானதால் உடலில் புண்கள் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். இதனை கமலா சரியாக கவனிக்கவில்லை. பழனிசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளப்பட்டியில் உள்ள கழிப்பிடம் அருகே படுத்துக் கொண்டு ஆங்காங்கு கிடைக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தார். சிலநேரங்களில் பசியால் மகளின் வீட்டிற்கும் செல்வார்.

    இதனால் மன வேதனையடைந்த கமலா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அவரை கருணை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் வேலைபார்க்கும் மில்லின் அருகே உள்ள கல்மாவு மில்லில் ஊழியராக வேலை பார்க்கும் சண்முகம் (45) என்பவரின் உதவியை நாடினார்.

    தந்தை நோயால் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கமலா கூறினார். மேலும் அவரை கருணை கொலை செய்துவிடலாம் என்று நினைப்பதாகவும் கூறினார். அதற்காக ரூ.600-ஐ சண்முகத்திடம் கொடுத்தார்.

    கடந்த 2-ந்தேதி சண்முகம், பழனிசாமியை தூக்கி சென்று அந்த கல் மாவு மில்லில் உள்ள ஒரு இருட்டறையில் போட்டார். மறுநாள் தவழ்ந்த படி வெளியே செல்ல முயன்ற பழனிசாமி முகத்தில் சண்முகம் கல்மாவு மூட்டையை தூக்கி போட்டார்.

    மூச்சு திணறி பழனிசாமி இறந்தார். பின்னர் அந்த மில்லிலேயே காலியாக உள்ள ஒரு இடத்தில் குழித்தோண்டி அவரை புதைத்த சண்முகம் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபட்டார். போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்று பழனிசாமியின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    முதியவரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×