search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் தடையை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவிப்பு
    X

    ஐகோர்ட் தடையை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவிப்பு

    சென்னை ஐகோர்ட் தடை விதித்ததை அடுத்து மூன்று நாட்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் திடீரென சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2,000 நர்சுகள் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் இறங்கினர்.

    போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    அமைச்சர் விஜய பாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பணி நிரந்தரம் செய்வது உடனே சாத்தியமில்லை என அரசு தெரிவித்துள்ளது. நர்சுகளின் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த மனுவை அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்தது. முறையாக நோட்டீஸ் கொடுத்த பின்னர் தான் போராட்டத்தை அறிவித்ததாக நர்சுகள் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தை கைவிடப்படும் வரை நர்சுகளின் வாதத்தை ஏற்கப்போவதில்லை என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    போராட்டத்திற்கு தடை விதிப்பதாகவும், நாளை அனைத்து செவிலியர்களும் பணியில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, போராட்ட களத்திற்கு வந்த அதிகாரிகள் செவிலியர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

    அதிகாரிகள் எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என செவிலியர்கள் கூறிய நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, மூன்று நாட்கள் நடத்தி வந்த உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×