search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி
    X

    புதுவையில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி

    புதுவையில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி இறந்து போனார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் பாலகுருசாமி எராஸ்மி. இவரது மனைவி காமாட்சி (வயது 70). ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர்.

    இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. காமாட்சியின் கணவர் பாலகுருசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். காமாட்சி மட்டும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    காமாட்சிக்கு நடக்க முடியாது. இதனால் அவருக்கான உதவிகளை பக்கத்து தெருவில் வசிக்கும் அகிலன் (43). செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். இரவு 1 மணி அளவில் கொசுவர்த்தி சரிந்து அவரது சேலையின் மீது விழுந்து தீ பற்றியது. காமாட்சிக்கு நடக்க முடியாததால் அவரால் எழுந்து வர இயலவில்லை.

    இதற்கிடையே தீ குடிசை வீட்டிலும் பரவி குடிசை முழுவதும் பற்றி எரிந்தது. உடல் முழுவதும் தீ பரவியதால் காமாட்சி அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காமாட்சியின் வீடு தீ பற்றி எரிவதை கண்டு தீயணைப்பு துறைக்கும், முத்தியால்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், காமாட்சி ஏற்கனவே படுத்திருந்த நிலையிலேயே கருகி இறந்திருந்தார்.

    இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×