search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி - மேலும் 4 பார்வையாளர்கள் நியமனம்
    X

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி - மேலும் 4 பார்வையாளர்கள் நியமனம்

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் 6 முனைப்போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தி.மு.க. சார்பில் மருதுகணேசும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அவர்களது கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

    அதேபோல், அப்போது அ.தி.மு.க. (அம்மா) சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், இப்போது சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார். டிசம்பர் 1-ந் தேதி மதியம் 1 மணிக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். மேலும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட்ட ஜெ.தீபாவும் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரும் ஓரிரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஓரிரு நாளில் வேட்பாளரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த முறை அக்கட்சி சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். எனவே, மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அதே நேரத்தில், இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாளை (30-ந் தேதி) கோவையில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

    எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்த பிறகே, ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க இருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி என்பதை மக்கள் தங்களுக்கு அளித்த நற்சான்றாக ஆளும் கட்சியினர் கருதிவருவதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஏனைய அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    இதேபோல், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரசாரத்தை தீவிரப்படுத்த தயாராகி வருகிறது. அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் அங்கு பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் ஆதரவு திரட்ட இருக்கின்றனர். ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் ஆர்.கே.நகர் தொகுதியை முற்றுகையிடுவார்கள் என தெரிகிறது.

    இந்த இடைத்தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26-ந் தேதி அறிவித்தது.

    அதன்படி, ஒவ்வொரு பார்வையாளர்களாக சென்னைக்கு வரத்தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவித்த அன்றே, காவல் துறை சட்டம்-ஒழுங்கு பார்வையாளராக நியமிக்கப்பட்ட இம்மானுவேல் கே.முய்வா சென்னைக்கு ஏற்கனவே வந்துவிட்டார்.

    இந்த நிலையில், பொதுப்பார்வையாளராக கம்லேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக புதுடெல்லியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலராக பணியாற்றும் கம்லேஷ் குமார் பந்த்தை பொதுப்பார்வையாளராக நியமித்துள்ளது. அவரை 94450-71063 என்ற கைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், செலவின பார்வையாளர்களாக 3 மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:-

    * குமார் பிரனாவ் (ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள்)

    * ஷீல் அசீஷ் (ரெயில்வே கணக்கியல் துறை)

    * டி.கே.ஜகோரியா (பாதுகாப்பு கணக்கியல் துறை)

    மேற்சொன்ன 3 செலவின பார்வையாளர்களும் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வந்து தங்களுடைய பணிகளை தொடங்க இருக்கிறார்கள். 
    Next Story
    ×