search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை: தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை
    X

    பெருந்துறை: தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    தூத்துக்குடி நியூ காலனி, ஜெயராஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சனோஜ் தேவராயர் (வயது 32). இன்டீரியர் டெக்கரே‌ஷன் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயராணி (30). இவர்களுக்கு ஜெசியல் ராயர் (2½) என்ற மகன் உள்ளார். சனோஜ் தேவராயர் கடந்த சில நாட் களுக்கு முன்பு தொழில் விசயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அவர் கடந்த 15-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்தார். அங்கு உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவர் 2 நாட்களுக்கு தங்க அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

    ஆனால் நேற்று காலை வரை அவர் அறையை காலி செய்யவில்லை. இதனால் லாட்ஜ் மானேஜர் சந்தேகம் அடைந்தார். எனவே நேற்று மதியம் சனோஜ் தேவராயர் தங்கி இருந்த அறை அருகே சென்றார்.

    அப்போது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மானேஜர் சந்தேகம் அடைந்தார். எனவே அவர் இது பற்றி பெருந்துறை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் வந்தார். அவர் முன்னிலையில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த லாட்ஜ் அறையின் கதவு திறக்கப்பட்டது.

    உள்ளே தூக்கில் சனோஜ் தேவராயர் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது சட்டை பாக்கெட்டில் ஆதார் கார்டு இருந்தது. அதில் இருந்த போன் நெம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேல் மற்றும் போலீசார் சனோஜ் தேவராயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சனோஜ் தேவராயரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இன்று சனோஜ் தேவராயரின் மனைவி மற்றும் உறவினர்கள் இங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சனோஜ் தேவராயர் நடத்திய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

    தொழில் நஷ்டம் காரணமாக மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். எனவே அவர் தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஓசூருக்கு வேலை விசயமாக செல்கிறேன் என்று கூறி விட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பெருந்துறைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×