search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தமிழக கவர்னர் ஆய்வு செய்வதுபோல, ஜனாதிபதி மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வாரா? என்று கேட்டுள்ளார். மத்திய மந்திரியாக இருந்த ஒருவர், மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருக்கும் அவர் எவ்வளவு பொறுப்போடு பேசியிருக்கிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

    கவர்னர் ஒரு மாவட்டத்துக்கு சென்று, அந்த மாவட்டத்தில் உள்ள சூழ்நிலைகளை தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கமுடியும். மாநில அரசு அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு குற்றம்சாட்டுவது மட்டும் தான் வேலை.

    பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதுபோல் இல்லையே? என்பது ஒரு மனிதரை போல இன்னொரு மனிதர் இல்லை. ஒரு கவர்னரை போல இன்னொரு கவர்னரும் இல்லை. அதற்காக மற்ற கவர்னர்கள் செயல்படவில்லை என்றோ, மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றோ சொல்ல முடியாது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலம் மட்டும் அல்ல, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலம் என்று முன்பு இருந்த கவர்னர்கள் எல்லோரும் இப்படி இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

    எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிடவில்லை. கியாஸ் விலை உயர்ந்திருக்கிறது. கியாஸ் மானியம் யாருக்கு போய் சேரவேண்டுமோ, அவர்களுக்கு போகிறது. பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயிக்கக் கூடாது என்பதற்காக ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் இந்த முறை மாற்றப்படும்.

    மத்திய அரசில் இருந்து என்னென்ன பிரிவுகளில் எவ்வளவு நிதி வரவேண்டும் என்பது தெரிந்தால், அதனை பெற்றுத்தர நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

    2 மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பது உண்மை. யார் சுட்டது என்பது இன்னும் உறுதியாக்கப்படவில்லை. சுட்டது யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கண்டிக்கப்படவேண்டியது. சுட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடக்கும். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. இன்னும் இந்த அரசு நிறைய செய்யவேண்டியது இருக்கிறது. மத்திய அரசு அனுமதி கொடுத்த குளச்சல் துறைமுகத்தை கொண்டுவரக்கூடிய நடவடிக்கையை எப்போது எடுக்கிறார்களோ, அப்போது தான் அரசு இருப்பதாக அர்த்தம். கிழக்கு கடற்கரை சாலை பணி கொடுக்கப்பட்டு, என்று அதற்கான பணி தொடங்குகிறதோ, அன்று தான் அரசு செயல்பட்டதாக அர்த்தம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
    Next Story
    ×