search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனுக்கு போலி துணிச்சல்: தமிழிசை கடும் தாக்கு
    X

    தினகரனுக்கு போலி துணிச்சல்: தமிழிசை கடும் தாக்கு

    டி.டி.வி. தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    பீளமேடு:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தது தமிழகத்தில் எதிர் கட்சிகள் மத்தியில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு தான். இதனை தமிழக அமைச்சர்களே எங்கு ஆய்வு நடத்தினாலும் மகிழ்ச்சி தான் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது என்று தெரியவில்லை.

    கவர்னர் ஏதோ சட்டமன்றத்தை கூட்டியதை போல எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். அவர், அவருக்குள்ள அதிகாரத்துக்குட்பட்டு தான் ஆய்வுகளை நடத்தி வருகிறார். இவர் சட்டமன்றத்தை கூட்டியது போல எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள்.


    மு.க.ஸ்டாலின் கவர்னர் இத்தோடு இந்த ஆய்வுகளை முடித்து கொள்ள வேண்டும் என்று கூறிஇருக்கிறார். இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். தமிழகத்தில் முழுநேர கவர்னர் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தற்போது முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோகித் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆய்வு நடத்தியதை எதிர்க்கிறார்கள்.

    அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, இதே போல் மத்திய அரசு அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி ஆய்வு செய்தால், பிரதமர் ஏற்பாரா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமிழிசை மக்கள் நலனுக்காக அந்த ஆய்வு அமைந்து இருந்தால் நாங்கள் வரவேற்போம் என்றார்.

    தொடர்ந்து குஜராத்தில் மோடி பிரதமராக இருந்த போது அப்போது அங்கு கவர்னர் ஆய்வு செய்த போது அது காங்கிரசின் தூண்டுதல் என்று குற்றம் சாட்டினீர்களே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமிழிசை அதையும், இதையும் எடுத்துக்கொள்வதில் நல்லது அல்ல.

    எதிர்க்க வேண்டிய அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் எதிர்கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஏன் கோபம் என்று தெரியவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் தன்னோடு இருந்தவர்கள் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு இருப்பார்.


    டி.டி.வி. தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்?.

    மதுவிலக்கு முழுமையாக கொண்டு வரவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம். அதில் இந்த அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் தமிழகத்தை ஆளுவோம். அது கவர்னரை வைத்து அல்ல. தமிழகத்தில் பா.ஜ.க. நேரடியாக ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×