search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி-அமராவதி ஆறுகளில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
    X

    காவிரி-அமராவதி ஆறுகளில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

    கரூர் மாவட்டத்தில் தடையை மீறி காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாட்டு வண்டிகள் மூலம் மணலை அள்ளி அதனை ஒரு இடத்தில் குவித்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஆற்றில் மணலை திருடி விற்பனை செய்து வருகின்றனர். மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு, போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 11-ந் தேதி பெரியவடுகப்பட்டி, சீத்தகாட்டுபுதூர் பகுதிகளில் மணல் அள்ளி வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 14 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் கலெக்டர் கோவிந்தராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். கரூர் கோட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், ஒரு போலீஸ்காரர் கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் காவிரி, அமராவதி ஆற்றங்கரையோரம் இரவு 7 மணி முதல் காலை வரை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். மணல் அள்ளி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    காவிரி, அமராவதி ஆறுகளில் தடையை மீறி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காவிரி, அமராவதி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதை தடுக்க ஆற்றின் கரையோரம் பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரூர் திருமாநிலையூரில் அமராவதி ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் செல்ல முடியாத அளவிற்கு நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆற்றில் மயானத்திற்கு செல்ல கூடிய பாதை என்பதால் குழி
    தோண்டவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து மாட்டு வண்டிகள் உள்ளே வர முடியாத அளவிற்கு பாதையில் கற்களை கொண்டு தடுப்புகள் அமைத்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் மற்ற இடங்களிலும் ஆற்றின் கரையோரம் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மணல் கடத்தலை தடுக்க போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×