search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கல்லூரி மாணவர் கொலை: 5 நண்பர்கள் கைது
    X

    தஞ்சை கல்லூரி மாணவர் கொலை: 5 நண்பர்கள் கைது

    தஞ்சையில் கல்லூரி மாணவரை கொன்ற அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் நாடார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பாப்பாச்சி. இவர்களுடைய மகன் சரவணன் (வயது 18). தனியார் கேட்டரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 30.9.17 அன்று சரவணன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சரவணனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சரவணன் மாயமாகி 40 நாட்களுக்கு மேலாகியும் அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது. இதனால் தஞ்சை போலீஸ் டி.எஸ்.பி. தமிழ் செல்வன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான மாணவர் சரவணன் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்தது.

    நண்பர்கள் கொன்றனர் இதைத் தொடர்ந்து சரவணனின் நண்பர்கள் சிலரை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவணின் நண்பர்கள் ஆனந்த் (வயது 19), கிருஷ்ணமூர்த்தி (18), நந்தகுமார் (18), அஜித் (19) , மற்றொரு சரவணன் (19) ஆகியோரிடம் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் 5 பேரும் மாணவர் சரவணனை கொலை செய்து தஞ்சை கூடலூர் அருகே வெண்ணாற்றங்கரையில் புதைத்ததை ஒப்பு கொண்டனர்.

    இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சரவணனை கொலை செய்த 5 பேரையும் போலீசார் அழைத்து கொண்டு வெண்ணாற்றங்கரைக்கு வந்தனர். அங்குள்ள மணல் திட்டில் புதைக்கப்பட்ட சரவணனின் உடலை தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி மாணவர் சரவணனை எதற்காக கொலை செய்தனர் என்று கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவரை அவரது நண்பர்களே சேர்ந்து கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×