search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவரிடம் விசாரணை
    X

    நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவரிடம் விசாரணை

    நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த பாப்பாக்குடி அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கணேசம்மாள் (வயது30). இவர் மீது கள்ளத் தொடர்பு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறை அடுத்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து சமீபத்தில் அவரை கைது செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த கணேசம்மாள் தினமும் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் வழக்கம் போல அவர் இன்றும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    கணேசம்மாள் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

    தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கணேசம்மாளை வெட்டிக்கொன்ற நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கணேசம்மாளின் கணவர் முருகன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×