search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கொள்ளையடிப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள்: ஸ்டாலின்
    X

    ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கொள்ளையடிப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள்: ஸ்டாலின்

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கொள்ளையடிப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு தனியார் பள்ளி வாகனங்களை பயன்படுத்த உத்தரவு போடப்பட்டு இருக்கிறதே?.

    பதில்:- திருநெல்வேலியில் வருகிற 13-ந்தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அரசின் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் வாகனங்கள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளின் வாகனத்தையும் பயன்படுத்துவதற்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

    வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளரே, போக்குவரத்து துறை சார்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ராதாபுரம் நாங்குநேரி தாலுகாக்களுக்கு சர்குலரே அனுப்பி இருக்கிறார்கள். அதாவது 13-ந்தேதி நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு உங்களுடைய வாகனங்களை 12-ந்தேதியே முழு தகுதியோடு ஓட்டுனர் மற்றும் உரிமையாளரோடு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

    அதேமாதிரி நேற்று 9-ந்தேதி தேனியில் நடந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மழையை காரணம் சொல்லி விடுமுறை என அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு மழையே பெய்யவில்லை.

    அதாவது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது அரசின் பணம். எம்.ஜி.ஆரின் பெருமையை பாடட்டும், பேசட்டும் நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அதை அரசியலாக்கி, ஏற்கனவே மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்த விழாவிற்கு அழைத்து வரக்கூடாது என நீதிமன்றமே ஒரு உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த ஆட்சியில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழையால் பயிர்கள் சேதமடைந்து மக்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் இந்த ஆட்சி கவலைப்படவில்லை.

    இன்றைக்கு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து விழாக்கள் நடத்தி அதில் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். செயல்படுவோம் என்கிறார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக தான் செயல்படுகிறார்கள் எப்படி என்றால் கொள்ளை அடிப்பதிலும், கமிஷன் பெறுவதிலும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×