search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜான்சிராணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காட்சி.
    X
    கத்திக்குத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜான்சிராணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காட்சி.

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை

    ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் பெண்ணை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூழாட்டுகுப்பத்தை சேர்ந்தவர் மரியபாக்கியம். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த தம்பதிக்கு நெல்சன் ஜோயல் (வயது 7) என்று மகனும், மெலிண்டா ஜாக்சி (2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மரிய பாக்கியத்தின் தாய் சபரி அம்மாளும் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மரியபாக்கியம் நேற்று இரவு பணிக்காக கும்பகோணம் சென்று விட்டார். வீட்டில் ஜான்சி ராணி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் தனியாக இருந்தார். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கினர்.

    நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜான்சி ராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜான்சி ராணி அவர்களை பிடிக்க முயன்றதோடு கூச்சல் போட்டார். மேலும் நகையை காப்பாற்ற அவர்களுடன் போராடினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கத்தியால் ஜான்சி ராணியின் தலையில் குத்தினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதற்குள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் கண் விழித்தனர். உடனே மர்ம நபர்கள் கத்தி முனையில் அவர்களை சத்தம் போட்டால் குத்தி விடுவதாக மிரட்டினர். இதனால் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அமர்ந்தனர்.

    பின்னர் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 ஜோடி கொலுசு, 1 பவுன் கம்மல், ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து வெளியே சென்றனர்.

    இதற்கிடையே மயக்கம் அடைந்த ஜான்சி ராணி கண் விழித்தார். பின்னர் திருடன், திருடன் என கூறி கொண்டு மர்ம நபர்களை விரட்டி சென்றார். அக்கம் பக்கத்தினரும் மர்ம நபர்களை விரட்டி சென்றனர். அதற்குள் 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் விரைந்து சென்று கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஜான்சி ராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மரிய பாக்கியம் இரவு பணிக்கு சென்று விட்டதை அறிந்து மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பத்தை நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×